மிதக்கும் காரணம்

உப்புத் தண்ணீரில் பனிக்கட்டி ஏன் மிதக்கிறது நாம் கடலில் பனி மலைகள்  மிதப்பதை பார்த்திருப்போம். என்றைக்காவது அது ஏன் மிதக்கிறது என்று யோசித்திருப்போமா?

சாதாரணமாக அறை வெப்பநிலையில் தண்ணீர் திரவமாக இருக்குமல்லவா? அந்தத் தண்ணீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கும்போது வெப்பநிலை குறைகிறது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நேர் மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் அணுக்களும், எதிர் மின்னூட்டம் கொண்ட ஆக்ஸிஜன் அணுக்களும் ஒன்றையொன்று ஈர்க்கும். அதனால் அவை ஒரு ஒழுங்கான அறுகோண வடிவத்தைப் பெறுகின்றன.

இதன் காரணமாக நீரானது நீர்ப்படிகங்களாகி  திட நிலையில் பனிக்கட்டியாக உருமாற்றம் அடைகிறது. 

தண்ணீரானது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும்போது அதன் பருமன் (அளவு) அதிகரிக்கிறது. ஒரு கிலோ நிறை கொண்ட நீரின் பருமனைவிட ஒரு கிலோ பனிக்கட்டியின் பருமன் (கொள்ளளவு) அதிகமாக இருக்கும். 

 ஒரு பொருளின் அடர்த்தி, திரவத்தின் அடர்த்தியைவிட அதிகமாக இருந்தால் அப்பொருள் திரவத்தில் மூழ்கும் எனப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள்.

ஒரு பொருளின் அடர்த்தியானது திரவத்தின் அடர்த்தியை விட குறைவாக இருந்தால் அப்பொருள் திரவத்தில் மிதக்கும். இதுவே ஆர்க்கிமிடிஸின் தத்துவம் ஆகும்.

ஆகவே அடர்த்தி அதிகமாக இருக்கும் உப்புக்கரைசலில் நீரில் அடர்த்தி குறைவாக இருக்கும் பனிக்கட்டி மிதக்கிறது.

Comments