தமிழகத்தில் செப்.1 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க திட்டம்

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

English phrases

இராமன் விளைவு

தமிழர் முறை